கவலை கொண்டு வாடுவதே
மனதின் கொள்கை ஆச்சு
அவற்றில் மீண்டு வாருவதே
தினமும் தொழிலாய்ப் போச்சு
உலகை நினைத்து உழலுவதால்
உறவும் பகையும் ஆச்சு
ஒன்றாய்க் கண்டு கொள்ளுவதே
எந்நாளும் கதையாய்ப் போச்சு
பசிக்கு உணவைத் தேடுவதே
பொழுது முழுதும் ஆச்சு
நசிக்கும் உடலை பேணுவதே
நமக்கு நாளும் மூச்சு
தெம்பு வேண்டும் என்பதாக
தினமும் போவோம் வாக்கு
என்பு தோலும் நிறைந்த உடலை
எதற்கு வளர்க்க வீம்பு
அமைதி வேண்டும் என்பதற்கு
அனுதினமும் நோன்பு
கலகம் செய்து கலைத்திடுவார்
உலகில் அதுதான் வழக்கு
கடவுள் காட்சி காணவென்று
காலை மாலை பூசை
மட மனதில் ஏறவில்லை
வேண்டிடுவார் வெறும் காசை
கணநேரம் அமைதியாக
கண்கள் மூடி நிற்க
அன்னையவள் அழகு முகம்
தெரியுது பார் எதிர்க்க
தெரிந்த முகம் தன்னில் அந்த
தீர்த்தம் தன்னை தெளிக்க
தீராத நோய் தீரும்
அதுதானே அபி டேகம்
உள்ளம் தன்னில் உவகைதானே
உடுத்தி விடும் உடையும்
உபசாரம் அதைச் செய்தல்
உண்மையான பக்தி
வடை தட்டி நைவேத்தியம்
வேகும் நமது புலனே
நடை சாத்தும் நேரமது
நிலையாய் நிற்கும் மனதே
புத்தி உள்ள மனிதருக்கு
போதும் இந்த பதமே
சுத்தி சுத்தி வந்தாலும்
சுகமோ என்றும் உன் உளமே
