அழகான கிராமத்துல
ஓரிடம் எங்கள் குச்சுன்னு
அழகான ஒரு கவித
என் தந்தை
அன்னைக்கு எழுதினாரு !
அப்படி இருந்த அந்த
அழகான வீட்ட
விட்டுட்டு வந்து புட்டோம் !
எங்க வீட்ட தான்
நாங்க துறந்துபுட்டோம் !
நெல்லி மர தோட்டத்த
தள்ளி தூர வந்துட்டோம் !
மெல்லிசா நினைவிருக்கு,
அல்லி பூக்கும் அந்த கொளம் !
மெட்ராசு வந்தாச்சு,
அட்ரசு மாறி போச்சு !
மா மரத்து இல பரிச்சு
வாசலிலே கட்டியது,
தென்னை மர ஓலையில
தோரணம் கட்டியது,
தோட்டத்து மணத் தக்காளி
பட்டுனு புடுங்கி போட்டு
வெத்த குழம்பு வச்சு
இட்டில்லிக்கு தொட்டுகிட்ட
மாறாத நெனவுகள
மனசுக்குள்ள ஆறாம
சுமந்தாச்சு !
வரப்புல நடந்த சுகம்
நெனப்புல வந்தாச்சு !
நாகரசம் பேட்டையினா
நாவுல ரசம் ஊறி விடும் !
கொஞ்ச நஞ்சம் ஏதுமில்ல
கொண்டாட்டம் போட்டதெல்லாம் !
திருவிழா தேருன்னா
தேங்கா உடைச்சு
தெய்வத்துக்கு படச்சுடுவோம் !
பிடாரி பின்னால
ஓடுறது ஒரு சுகந்தான் !
காவு கொடுக்கரத
காது பொத்தி கடந்திடுவோம் !
தைப்பொங்க வந்துவிட்டா
கதையே மாறிப் போகும் !
மாடு கன்னுக்கு
மால போட்டு அலங்கரிப்போம் !
நமக்கு செய்வதுபோல்
நாவினிக்க பொங்கல் வச்சு
மாட்டுக்கும் தந்திடுவோம் !
தீவாளி அன்னிக்கு
விடிகால எழுந்து நின்னு
பதிவிரத பத்தினி போல்
நீராடி நீறு பூசி
புத்தாட புனைஞ்சிடுவோம் !
பிரிச்சு தந்த பட்டாச
படபடப்பா வெடிச்சிடுவோம் !
லட்சுமி வெடிந்நா
காத பொத்தி ஓடிடுவோம் !
ஆடிப் பண்டிகன்னா
ஓடி விளையாடிடுவோம் !
பட்டத்த பறக்க விட்டு
பாதியில நகர்ந்திடுவோம் !
அரச மர பிரதக்ஷிணம்னா
ஆயிரம் பக்ஷிணந்தான் !
ஆனா
பாயிரம் படிச்சாதான்
பாட்டி தந்திடுவா !
காவேரி மணலினிலே
கட்டி பிடிச்சு
உருண்டதெல்லாம்
கண்ணில் இன்னும்
நிக்குதப்பா,
கனவு போல
காட்சி தருகுதப்பா !
பள்ளிக்கூடம் போகலன்னா
இழுத்துட்டு போவதற்கு
வாத்தியாரு வீட்டுக்கே
வருவாரு !
இப்ப போல செல்லிருந்தா
எப்ப வேணா பேசிடலாம் !
அதுக்கு வழியில்ல,
அம்மாவ பாக்கணும்னா
சாயந்திம் வரயிலும்
சோகமா இருந்திடனும் !
சிலெட்டில அம்மான்னு
எழுதறதே ஒரு சுகந்தான் !
கல்யாணம் காட்சின்னா
கலகலப்பு நிறஞ்சு விடும் !
அத்த மாமான்னு
அகம் முழுதும் கூட்டந்தான் !
வாடா இங்கண்ணு
வாய் நெறய கூப்பிட்டு
விசாரிக்கும் வழக்கமெல்லாம்
வினாவா போச்சு இந்த
விரைவான உலகத்துல !
எத்தனதா எழுதினாலும்
ஏகாந்தமான அந்த
கிராமத்து வாழ்க்க
இன்னும் எங்க மனசுக்குள்ள
ஆறாத நினைவாக
இருக்கத்தான் செய்யுறது,
என்ன செய்யுறது ?
புழப்ப தேடி நாங்க
பட்டணத்து பிரவேசம்
செஞ்சுபுட்டம் தெரியாம !
அஞ்சு நிமிஷம் கூட
அமைதிக்கு இடமில்ல !
அலை பேசி குரூப்புல தான்
எங்க ஊரு அரட்டையெல்லாம் !
விழுது வேருண்ணு
பேரு வப்போம் குரூப்புக்கு !
வயக்காடும் ஈர மண்ணும்
நெசமாக வந்திடுமோ ?
வேல ஓஞ்சு போனபின்னா
ஒரு வேல கிராமத்துக்கு
திரும்பிப் போயி வாழனும்னு
எனக்கொரு எண்ணமுன்னு
சிடேட்டஸ் மட்டும்தான்
இப்போதிக்கு போட்டு வச்சேன்!
