கூடலை விட ஊடல் சிறந்தது என்று தோன்றுகிறது ஏனென்றால்
கூடலில் கூட இருக்கும்போது இன்பம்
ஊடலிலோ எங்கிருந்தாலும் உன் நினைவு !
என்னை மறந்து விடு என்று
நீ கோபத்தில் கூறும்போதுதான்
உன் நினைவுகளின் தாக்கம்
அதிகமாகின்றது !
என்னைப் பார்க்காதே
என்று நீ கூறுகையில்
கோபத்தில் உன் முகம்
சிவந்து விடுகிறது !
அதன் ஒளியில்
என் கண்கள்
கூசித்தான் போகிறது,
பின் எப்படிப் பார்ப்பது?
நீ வருவாய் என்று
காத்திருந்தேன்
காணாமல் போனது
நீ இல்லை
என் மனம்தான் !
நாளை நீ வருவாய்
என்று இரவு முழுதும்
விழித்திருந்தேன்
என்னோடு கூட
நிலவும்தான்,
அதற்குத்தான்
தெரியும் எத்தனை
காதலர்கள்
விழித்திருந்தார்கள் என!
கூடலுக்குத்தான்
வரவில்லை
ஊடலுக்காகவாவது
வருவாயா?
தேன் கசப்பு என்பதும்
பால் துவர்ப்பு என்பதும்
காதலியைக்
காணாமல் தவிப்பவர்க்குத்தான்
தெரியும் !
நாளை விடிவதற்குள்
வந்து விடு
இல்லாவிட்டால்
எனக்கு எப்போதுமே
இருள்தான் !
