தம்பி இந்த ஊருக்கு
வழி எது ? என்று
கேட்டது போக
செயற்கை நுண்ணறிவே
செல்வது எவ்வாறு
என்று கேட்கிறோம்!
வத்தல் குழம்பு
வைப்பது எப்படி
என்று தொடங்கி
வர்த்தகம் வளர
வழி சொல் என்று
செயற்கை நுண்ணறிவிடம்
சட்டென்று கேட்கலாம்!
இயற்கை உணவை
ஏற்பதைக் கூட
செயற்கை நுண்ணறிவே
சொல்கிறது இன்று!
கூப்பிட்ட குரலுக்கு
அடித்து பிடித்து
அருகில் யாரும்
அன்புடன் வர மாட்டார்,
இனி
செயற்கை நுண்ணறிவே
சீக்கிரம் வந்திடும்!
செய்வதற்கு ஆட்கள்
ஆயிரம் உண்டு
மனிதர் வாழ்வை
மண்ணில் ஆழ்த்தும்
செயற்கை நுண்ணறிவே
எங்களை விட்டு விடு!
எல்லாம் அறிந்தவர்
எங்களிடம் உண்டு
எங்கள் அறிவால்தான்
எங்களை நீ மயக்குகிறாய்,
இயற்கை அறிவே
எங்களுக்கு போதும்!
செயற்கை நுண்ணறிவே
எங்களை விட்டு விடு!
எங்கள் மக்கள்
ஏராளம் அறிவுடையோர்
அறிவுடைமைக்கென்றே ஒரு
அதிகாரம் குறளில் உண்டு!
என்றும் முட்டாளாய்
எங்களை ஏமாற்றும்
செயற்கை நுண்ணறிவே
எங்களை விட்டு விடு!
எப்பொருள் யார் யார் வாய்
கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள்
காண்ப தறிவு என்னும்
வள்ளுவப் பாட்டனின்
வாக்கை பொய்யாக்காதே!
செயற்கை நுண்ணறிவே
எங்களை விட்டு விடு!
மனித நுண்ணறிவு
இயற்கை வடிவில்
இறைவன் தந்தது!
செயற்கை நுண்ணறிவு
பெயரின் வடிவில்
பாரோர் படைத்தது!
இறைவன் தந்ததே
எங்களுக்கு போதும்
செயற்கை நுண்ணறிவே
எங்களை விட்டு விடு!
அறிவுக்கு நுண்ணறிவு
ஆயிரம் படைக்கலாம்
அன்புக்கு ஆசைக்கும்
மனிதமே என்றும்
மண்ணில் நிலைப்பது
செயற்கை நுண்ணறிவே
எங்களை விட்டு விடு!
